Sunday, September 04, 2016

உயிர் பெற்ற நூல்கள்!

உயிர் பெற்ற நூல்கள்!
ஆகஸ்ட் 22 அன்று சென்னை அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில் நடைபெற்ற சிவில் சர்வீசஸ் பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக அமைந்தது நிறைவான ஒரு நிகழ்வு. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கெடுத்தனர். இவ்வளவு பேர் பங்கெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அரங்கம் நிரம்பி வழிந்தது. மாணவர்கள் பலர் நான்கு மணிநேரம் நின்றுகொண்டே கவனித்தது அவர்களின் தேடுதலையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியது.
ஒரு முகநூல் அழைப்பின்மூலம் தமிழகத்தின் பலபகுதிகளிலிருந்து இத்தனைபேரைத் திரட்டியது சமூக ஊடகத்தின் வலிமையை பறைசாற்றியது. மிக அதிக பங்கேற்பாளர்கள் வந்ததால் ஒருநாள் நிகழ்வினைஇரண்டுநாளாக நீட்டித்தோம்.
ஆயிரம் மாணவர்களுக்கும் முழுமையாக இல்லையெனினும் ஏதோ ஒருவகையில் ஒரு சிறு வழிகாட்டுதலையாவது செய்திருப்போம் என்று கருதுகிறேன்.
இந்த நிகழ்வு வெற்றிகரமாக அமையக் காரணமாக அமைந்தவர்கள் சிலரைப் பற்றி குறிப்பிட்டாக வேண்டும்.
முதலில் அகில இந்திய குடிமைப் பணிகள் மையத்தின் அர்ப்பணிப்புள்ள முதல்வர் திருமதி. பிரேம்கலாராணி ( Prem Kala Rani ) மற்றும் குடிமைப் பணிகள் பயிற்சி மைய அலுவலர்கள் . இவர் இந்த நிகழ்வுக்கு இசைவு தெரிவித்து அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புறச் செய்திருந்தார். அவரின் அன்புக்கும் மாணவர்கள் மீதான அக்கறைக்கும் நன்றிகள் பல.
தமிழ் வழியில் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல பாடநூல்கள் கிடைப்பதில்லை.தமிழ் மாணவர்கள் தமிழில் நல்ல நூல்கள் கிடைக்காமல் ஆங்கில நூல்களைப் படித்து தமிழில் மொழிபெயர்த்து எழுதி இரட்டைச் சுமையைச் சுமக்கின்றனர். இதைப் போக்கவேண்டும்என்பது என் நீண்டநாள் எண்ணம். இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்யும்போது தமிழ் வழி மாணவர்களுக்கு குறைந்தது 3 ஆயிரம் பக்கங்களாவது பாடநூல்களை வழங்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், தமிழ் மாணவர்களுக்கு அரிய நூல்கள் பலகொண்ட 75,500 பக்கங்கள் விரியும் பெரும் மின்நூலகம் ஒன்றை கையில் வழங்கியிருக்கிறோம்.
இந்த நூல்கள் பல கடந்த 35 ஆண்டுகளாக தூசுபடிந்த அடுக்குகளில் செல்லரித்துக் கிடந்தன. வெளியில் மாணவர்கள் நூல்கள் கிடைக்காமல் நூலகம்தோரும் அலைந்து வந்தனர். இவற்றை மீட்டு மின்னூலாக்கி பொதுமைப் படுத்திய மிகப்பெரும் பணியைச் செய்தவர் மதிப்புக்குரிய திரு. உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். இவர்போன்ற தமிழ் உணர்வாளர் தமிழ் இணையக் கல்விக் கழகத்துக்கு இயக்குநராக வாய்க்கப்பெற்றது தமிழ்நாட்டின் நல்லூழ் எனலாம். அவரின் கனவுத் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டால் தொழில்நுட்ப உலகில் தமிழின் புலிப்பாய்ச்சல் நடக்கும்.
இந்த நூல்களை மாணவர்களின் கைகளில் கொண்டு சேர்ப்பதற்கு நிர்வாகத்தடைகள் சில ஏற்பட்டன. இதை தகர்த்து மாணவர்களுக்கு உடனடியாக வழங்க உத்தரவிட்டவர் ஊரகவளர்ச்சித் துறை இணை இயக்குநர் நண்பர் திரு. மகேஷ்பாபு ( Magesh Babu ). இவர் தற்போது இணை இயக்குநர் தமிழ் இணையக் கல்விக் கழகம் மற்றும் மின்நிர்வாக இணை இயக்குநராகப் பணியாற்றுகிறார். ஊரகவளர்ச்சித் துறையிலிருந்து தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் ஆய்வுத் தகைமையாளராக பணியாற்றும் நண்பர் திரு. சிவ. தினகரன் (Chennai Thamizhan) மிகமுக்கிய உதவிகளைச் செய்தார். இந்த இரு வளர்ச்சித்துறை அலுவலர்கள் தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செய்து வரும் பணிகள் மிக முக்கியமானவை. காலம் கனியாததால் அனைத்தையும் வெளிப்படுத்த இயலவில்லை. இவர்களுக்கும், இவர்கள் குழுவுக்கும் நன்றிகள் பல.
தமிழ் மாணவர்களுக்காக எந்த நிலையிலும் உதவிசெய்யக் காத்திருக்கும் ஐயா அ.த.பன்னீர்செல்வம் (A.t. Panneerselvam) அவர்களின் அர்ப்பணிப்புள்ள பணியின் மூலம் இணைய வழி தமிழ் வகுப்புகள் மாணவர்களின் கைகளை எட்டியுள்ளன. அவருக்கு நன்றி சொல்ல சொற்கள் ஏதுமில்லை.
இந்தப் பயிற்சிப்பட்டறை தொடர்பாக ஊக்கப்படுத்தி என்னை இருமாதங்கள் பயிற்சியிலிருந்து விடுப்பில் அனுப்பி, பல்வேறு வழிகளில் உதவிபுரிந்துவரும் எமது நண்பர்கள் திரு. பாலாஜி (Balaji Manoharan) உள்ளிட்ட தமிழ் ஐஆர்எஸ் நண்பர்கள் இல்லையெனில் இத்திட்டம் செயல்வடிவம் பெற்றிருக்காது. அவர்களின் நற்பணி இனியும் தொடரும். அவர்களுக்கும் எம் நன்றிகள்.
இத்திட்டம் தொடர்பாக நான் ஒவ்வொருமுறை தொல்லைசெய்யும்போதும் கருத்தாலோசனைகள் தந்து திட்டம் தொடங்க பின்புலமாக இருந்தவர்கள் இருவர். முதலாமவர், பெயரிலேயே தமிழைத் தாங்கி மக்கள் பணியே மகேசன் பணி என்று செயல்புரியும் நண்பர் திரு. முத்தமிழ், டிஎஸ்பி. ( Muthtamil Angamuthu). இரண்டாமவர், பலநாள் கண்துஞ்சாது எமது தொழில்நுட்ப திட்டங்களை செயல்வடிவம்தந்த கணிணிப் பொறியாளர் அண்ணன் திரு. மலையையன் ( Malai Ayyah). இருவரும் என் இடையறாத தொல்லைகளுக்குப் பொருத்தருள்வாராக.
தமிழ் மாணவர்களுக்காக தம் நூல்கள் பலவற்றைத் தந்து உதவி, தமிழ் இலக்கியங்களைக் காட்சிப்படுத்த பல நல்ல ஆலோசனைத் தந்துவரும் இனிய நண்பர் திரு.தர்மேந்திரா ( Tharmendira Kasinathan) அவர்களுக்கு என்றும் நன்றிகள்.
இது போன்ற பயிற்சிப் பட்டறையை நடத்த வேண்டும் என்று நானும் தம்பி சரவணன் (Saravanan Selvan) அவர்களும், இந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற நாளன்று இரவு ஆலோசித்து தீர்மானித்தோம். 
மாணவர்களுக்கு தாங்களும் உதவ வேண்டும் என்ற என் ஒற்றை அழைப்பை ஏற்று எங்களுடன் கைகோர்த்த தம்பிகள் திரு. கௌரிசங்கர் ஐஆர்எஸ்(Gowri Sankar) மற்றும் திரு. இரமராஜன், ஐசிஎல்எஸ் ஆகியோர் இல்லை எனில் பயிற்சிப் பட்டறையைத் தனியாளாக நிறைவு செய்திருக்க இயலாது. இனிவரும் காலங்களில் இது போன்ற பணிகளில் இவர்கள் தொடர்ந்து மாணவர்களுக்கு உதவக் காத்திருக்கின்றனர். நாங்கள் இருப்போம் உங்களுடன் என்றும்.
இங்கு பெயர் குறிப்பிட்டால் பட்டியல் நீண்டு கொண்டே போகும் அளவுக்கு பல நண்பர்கள் பலவகைகளில் இந்தத் திட்டத்தில் உதவியுள்ளனர். இன்னும் உதவி புரியக் காத்திருக்கின்றனர்.
என் அழைப்பினை ஏற்று பயிற்சிக்கு வந்த அனைத்து மாணவர்களுக்கும் நன்றிகள். உங்களின் எதிர்பார்ப்புகளை ஓரளவு பூர்த்தி செய்திருக்கிறோம் என்று நம்புகிறேன்.
தமிழ் மாணவர்கள் பாடநூல் இல்லை என்ற காரணத்தால் தம்மால் குடிமைப் பணிகள் தேர்வு போன்ற தேர்வுகளை எழுத இயலவில்லை என்று சொல்லிய அவல நிலையைப் போக்கி இருக்கிறோம். தமிழகத்தின் ஐஏஎஸ் பணியாளர் என்ற அடையாளத்துடன் தொடங்கிய முதல்பணி வெற்றியடைந்துள்ளது. இன்னும், செய்யணே்டிய பணிகள் ஏராளம் உள்ளன. ஒவ்வொன்றாக இணைந்துசெய்வோம்.
இங்கு மாணவர்களுக்கு நாங்கள் தந்துள்ள நூல்கள் பல, நாங்கள் தேர்வுக்குத் தயாராகும்போது எமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் தேர்வுக்குத் தயாராவது இன்னும் எளிதாக இருந்திருக்கும். இவற்றை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். எளிதாகக் கிடைக்கிறது என்பதற்காக சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
திறக்கப்படாத புத்தகங்கள் காகிதக்கட்டுகள். 
படிக்கப்படாத நூல்கள் உயிரற்ற உடல்கள். 
மாணவர்களே, நூல்களை உயிர்ப்பியுங்கள்.
அன்புடன்,
க.இளம்பகவத் IPS.

No comments:

Popular Posts